அருப்புக்கோட்டை, மார்ச் 14: அருப்புக்கோட்டை அருகே, பந்தல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வீடியோ லேப்ராஸ்கோப் மூலமாக நவீன முறையில் பெண்களுக்கான கருத்தடை முகாம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட மருத்துவப் பணிகளின் துணை இயக்குநர் பழனிச்சாமி தலைமையில், இணை இயக்குநர் மனோகரன் முன்னிலையில் நடந்த முகாமில் 8 பேருக்கு கருத்தடை செய்யப்பட்டது. தொடக்க நிகழ்ச்சியில் குடும்பநல மருத்துவ குழுவினர் பிச்சைக்காளி, உமாமகேஸ்வரி, ராஜலட்சுமி ஆகியோர் சிகிச்சை அளித்தனர். கருத்தடை செய்து கொண்டவர்களுக்கு தமிழக அரசு சார்பாக 600 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. மருத்துவமனை சார்பாக சில்வர் பாத்திரம் வழங்கினர். நவீன கருத்தடை முகாம் சிறப்பாக நடைபெற அருப்புக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் சஞ்சய் பாண்டியன் மருத்துவர் கணேஷ், மற்றும் பந்தல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.