போடி, மார்ச் 14: பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் போடி தாலுகாவில் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சோதனைச்சாவடி அமைக்கப்படாததால் வாக்காளர்களுக்கு பணம் கொண்டு சேர்க்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் மார்ச் 18ம் தேதி முதல் வேட்பு மனுதாக்கல் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து தேர்தல் விதிமுறையை அமல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தேனி- போடி விலக்கிலுள்ள மாரியம்மன்பட்டியிலும், போடி நுழைவாயில் பங்காருசாமி கண்மாய் அருகிலும், போடி ரயில்வே கேட் ரெட்டை வாய்க்கால் பகுதியிலும், போடி தேவாரம் சாலையில் மேலசொக்கநாதபுரம் பிரிவிலும் சோதனைச்சாவடி அமைக்கப்பட வேண்டும். போலீசாருடன் வருவாய் துறையிலிருந்து தேர்தல் சம்மந்தமான அதிகாரிகளும், அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனை செய்து அனுப்ப வேண்டும் என்ற கட்டாய விதி இருக்கிறது. ஆனால் இந்த பகுதியில் இன்னமும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்படவில்லை.