ஆண்டிபட்டி, மார்ச் 14: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள டி.அணைக்கரைபட்டி விநாயகர், மாரியம்மன், காளியம்மன், பைரவர் ஆகிய சாமிகளுக்கு கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடந்து, கணபதி ஹோமம், கோமாதா பூஜை, உள்ளிட்ட பூஜைகள் நடந்து, பல புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் பூஜிக்கப்பட்டது. தொடர்ந்து பூர்ணாகுதி முடிந்து கலச குடம் புறப்பாடாகி விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றிய போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் குலவையிட்டு வழிபட்டனர். பின்னர் பக்தர்கள் மேல் புனித நீர் தெளிக்கப்பட்டது. இதனையடுத்து மூலவர் விநாயகர், மாரியம்மன், காளியம்மன், பைரவர் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், மஞ்சள், தேன் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி மாபெரும் அன்னதானம் நடந்தது.ஏற்பாடுகளை ஊர் முதன்மை செஞ்சூரி செல்வம், நாட்டாமை அழகுதுரை மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவில் திமுக மாநில விவசாய தொழிலாளர் அணி தலைவர் எல்.மூக்கையா, ஆண்டிபட்டி ஒன்றிய பொறுப்பாளர் மகாராசன், அமமுக மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், அதிமுக ஒன்றிய துணை செயலாளர் அமரேசன் உள்பட அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.