அதிகாரிகளின் மெத்தனத்தால் வீணாகும் காவிரி குடிநீர்

ராமநாதபுரம், மார்ச் 14: ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்புற கிராம பகுதிகளுக்கு ராட்சத சிமென்ட் குழாய்கள் மூலம் காவிரி கூட்டு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. குடிநீர் சீராக சப்ளை செய்ய கிராம பகுதியில் குடிநீர் டேங்குகள் அமைக்கப்பட்டு அதில் வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளன.குழாய்களில் குடிநீர் வரும்போது பல இடங்களில் வால்வுகள், குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டு தண்ணீர் வீணாக்கப்படுகிறது. மாவட்டத்தில் மண்டபம், வழுதூர், பார்த்திபனூர், முதுகுளத்தூர், பரமக்குடி, நயினார்கோவில், வாணியவல்லம், கொடிக்குளம் ஆகிய இடங்களில் குடிநீர் தொட்டிகளில் நீர் வீணாவது வழக்கமாக உள்ளது. இதுதவிர சாலையோரங்களில் அடிக்கடி ஒரு சிலர் தங்கள் சுய லாபத்திற்காக காவிரி குடிநீர் குழாய்களை உடைத்து அருகில் உள்ள வயல், ஊரணிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்கின்றனர்.ஒரு சிலர் டேங்கின் அருகிலேயே குளிப்பது, துணிகளை துவைப்பது போன்ற அநாகரிக செயல்களை செய்கின்றனர். இதனால் தொற்றுநோய் பரவும் நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தாலும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கண்டு கொள்வது கிடையாது. ஏற்கனவே காவிரி குடிநீர் பற்றாக்குறையால் நகர், கிராம பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வரும் நிலையில் அதிகாரிகளும் அலுவலகத்தை விட்டு வெளியேறாமல் முடங்கி கிடப்பதால் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை விசுவரூபம் எடுத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியிடங்களில் குடிநீரை குடம் ஒன்றுக்கு ரூ 10 வரை விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.

அதுவும் மொத்தமாக டேங்கர் லாரியோடு வாங்கினால்தான். சில்லரையாக குடிநீர் கேட்டால் டேங்கர் ஓட்டுநர்கள் கொடுப்பது கிடையாது. மாவட்டத்தில் குழாய்களை சேதப்படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், கோடைக்காலம் ஆரம்பிக்க உள்ள நிலையில் விரைவில் குடிநீர் பிரச்னையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.உச்சிப்புளியை சேர்ந்த ராணி கூறுகையில், ‘கிராமங்களுக்கு முறையாக குடிநீர் வருவது கிடையாது. பல மாதங்களாக குடிநீர் இல்லாமல் சிரமம் அடைந்து வருகிறோம். குடிநீர் தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் பயனில்லை. குடிநீர் கிடைக்காமல் சாலையோரத்தில் தேங்கும் நீரை குடித்து வருகிறோம். குடிநீர் கலங்களாகவும், அசுத்தமாகவும் உள்ளதால் தொற்றும்நோய் பரவி வருகிறது.இதனால் வயதானவர்களும், குழந்தைகளும் பாதிப்படைகின்றனர். வேறு வழியில்லாமல் சில இடங்களில் நாங்களே குழாயை உடைத்து தண்ணீர் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. முறையாக குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பிரச்னைகள் வராது’ என்றார்.

Related Stories: