ராமநாதபுரம், மார்ச் 14: ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்புற கிராம பகுதிகளுக்கு ராட்சத சிமென்ட் குழாய்கள் மூலம் காவிரி கூட்டு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. குடிநீர் சீராக சப்ளை செய்ய கிராம பகுதியில் குடிநீர் டேங்குகள் அமைக்கப்பட்டு அதில் வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளன.குழாய்களில் குடிநீர் வரும்போது பல இடங்களில் வால்வுகள், குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டு தண்ணீர் வீணாக்கப்படுகிறது. மாவட்டத்தில் மண்டபம், வழுதூர், பார்த்திபனூர், முதுகுளத்தூர், பரமக்குடி, நயினார்கோவில், வாணியவல்லம், கொடிக்குளம் ஆகிய இடங்களில் குடிநீர் தொட்டிகளில் நீர் வீணாவது வழக்கமாக உள்ளது. இதுதவிர சாலையோரங்களில் அடிக்கடி ஒரு சிலர் தங்கள் சுய லாபத்திற்காக காவிரி குடிநீர் குழாய்களை உடைத்து அருகில் உள்ள வயல், ஊரணிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்கின்றனர்.ஒரு சிலர் டேங்கின் அருகிலேயே குளிப்பது, துணிகளை துவைப்பது போன்ற அநாகரிக செயல்களை செய்கின்றனர். இதனால் தொற்றுநோய் பரவும் நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தாலும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கண்டு கொள்வது கிடையாது. ஏற்கனவே காவிரி குடிநீர் பற்றாக்குறையால் நகர், கிராம பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வரும் நிலையில் அதிகாரிகளும் அலுவலகத்தை விட்டு வெளியேறாமல் முடங்கி கிடப்பதால் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை விசுவரூபம் எடுத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியிடங்களில் குடிநீரை குடம் ஒன்றுக்கு ரூ 10 வரை விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.