செம்பட்டி மார்ச் 14: தேர்தல் நடத்ைத விதிகள் அமலுக்கு வந்த பிறகும் நிலக்கோட்டை தொகுதியில் கட்சி கொடிகள், பேனர்கள் அகற்றப்படவில்லை. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து மூன்று நாட்கள் ஆகிறது. நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு என தனி அதிகாரியும் நியமிக்கப்பட்டு அனைத்து கட்சிகள் மற்றும் காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகளின் கூட்டமும் நடத்தப்பட்டு விட்டது.
இந்நிலையில் தற்போது வரை இந்த சட்டமன்ற தொகுதியின் மிகவும் முக்கிய பகுதிகளில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், பேனர்கள், போஸ்டர்கள் விளம்பர பலகைகள் என அகற்றப்படாமல் உள்ளது. தேர்தல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மெத்தனமாக செயல்படுகின்றனர். மக்கள் கூறுகையில், ‘‘நிலக்கோட்டை நகரின் முக்கிய பகுதிகளான தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள கொடி கம்பங்கள், பஸ் நிலையங்களில் உள்ள கொடிக்கம்பங்கள் ஆகியவற்றில் பல்வேறு அரசியல் கட்சிகளின் கொடிகள் பறக்கின்றன.மேலும் அரசு அலுவலகங்களின் சுவர்கள் மற்றும் பஸ் நிலையங்களில் ஒட்டப்பட்ட அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள் கூட அகற்றப்படாமல் உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டால் தேர்தல் நேர்மையாக, அமைதியாக நடைபெறுமா என்று சந்தேகம் எழுகிறது’’ என்றனர்.