பழநி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்

பழநி, மார்ச் 14: பழநி கோயிலின் பங்குனி உத்திரத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முதன்மை திருவிழா பங்குனி உத்திரம். இவ்விழாவிற்கு திண்டுக்கல், ஈரோடு, கரூர், கோவை, நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி காவிரியாற்றில் தீர்த்தம் எடுத்து காவடியாக கொண்டு வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இந்த இத்திருவிழா நாளை திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. காலை 7 மணிக்குமேல் 8 மணிக்குள் மீன லக்னத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.    பகல் 12.30 மணிக்கு வள்ளி-தெய்வானை சமேதரராக சப்பரத்தில் பட்டக்காரர் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8 மணிக்கு சன்னதி வீதி மற்றும் கிரி வீதிகளில் சாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் 20ம் தேதி நடக்கிறது. இரவு 6.30 மணிக்கு மேல் இரவு 7.45 மணிக்குள் கன்யா லக்னத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானை சமேதராய் மணக்கோலத்தில் வெள்ளி ரதத்தில் சன்னதி வீதி மற்றும் கிரி வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் வரும் 21ம் தேதி நடக்க உள்ளது. அன்று காலை 4.30 மணிக்கு முத்துகுமாரசாமி தீர்த்தவாரிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். காலை 6 மணிக்கு தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து காலை 11.15 மணிக்கு மேல்  தேர் ஏற்றமும், மாலை 4.39 மணிக்கு மேல் கிரிவீதிகளில் தேரோட்டமும் நடைபெறும். விழா நடைபெறும் 10 நாட்களும் சாமி தந்தப் பல்லக்கு, தங்கக்குதிரை, தங்கமயில், வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சியும், குடமுழுக்கு நினைவரங்கில் பக்திச் சொற்பொழிவு, பரதநாட்டியம், இன்னிசை நிகழ்ச்சி, நாட்டுப்புற பாடல் மற்றும் நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

Related Stories: