ஏரியில் ஸ்கூட்டர் விழுந்து கணவன் கண் முன்னே மனைவி பலி

கோபி, மார்ச் 14:கோபி அருகே உள்ள ஆப்பக்கூடல் மல்லிகைநகரை சேர்ந்தவர் சவுந்திரராஜன்(32).  எலெக்ட்ரீசியனாக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி செல்வி(28) ஓசைபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.

இவர்களுக்கு சஜிதா(7) என்ற மகளும், அஸ்வின்(3) என்ற மகனும் உள்ளனர். இன்று கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையத்தில் உள்ள குலதெய்வம் கோயிலில் மகனுக்கு மொட்டை அடித்து காதுகுத்தும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதனால் நேற்று அதிகாலை சவுந்திரராஜனும், செல்வியும் ஸ்கூட்டரில் பி.மேட்டுப்பாளையத்தில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த அனந்தசாகரம் ஏரிக்குள் விழுந்தது. இதில் இருவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில் தண்ணீருக்குள் மூழ்கினர். அதிகாலை நேரம் என்பதால் நடமாட்டம் குறைவாக இருந்ததால் ஸ்கூட்டர் தண்ணீருக்குள் விழுந்தது பொதுமக்களுக்கு தெரியவில்லை. அதன் பின்னர் மயக்க நிலையில் கவுந்தரராஜன் கரையோரம் கிடப்பது கண்டு கவுந்தப்பாடி போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.தகவலின்பேரில் கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மயங்கிய நிலையில் இருந்த சவுந்திரராஜனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏரியில் மூழ்கி பலியான செல்வியின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: