சூலூர், மார்ச் 14: நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, சூலூர் பகுதிகளில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிகம்பங்களை அகற்றும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. நேற்று சூலூர் மற்றும் கண்ணம்பாளையம் பகுதியில் அரசியல் கட்சிகளின் 100க்கும் மேற்பட்ட கொடி கம்பங்கள் பேரூராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது. ஒருசில அரசியல் கட்சியினர் கொடிமரங்களை தாங்களே அப்புறப்படுத்தி கொள்வதாக கூறினர். அவர்களுக்கு நாளை வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. மேலும் சில அரசியல் கட்சியினரின் கொடி கம்பங்கள் அகற்ற முடியாத அளவுக்கு காங்கிரீட் போட்டு நடப்பட்டுள்ளது. அவைகளை அகற்றுவது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என பணியாளர்கள் தெரிவித்தனர்.-படம்...உண்டு.. சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலை முன்பாக அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தை பேரூராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.