கோவை, மார்ச் 14: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து, இலவச அமரர் ஊர்தி ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து சுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: இலவச அமரர் ஊர்தி வாகனத்தில் குளிர்சாதன பெட்டியை தவிர வேறு எந்த பொருட்களும், சாதனங்களையும் கொண்டு செல்ல கூடாது. வாகனத்தில் அங்கீகரிக்கப்படாத நபர்களை ஏற்ற கூடாது. போலீசார், தேர்தல் கண்காணிப்பாளர்கள், அமரர் ஊர்திகளை ஆய்வு செய்யவும், ஆவணங்களை பார்வையிடவும் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நேரத்தில் ஊழியர்கள் ஆய்வில் ஈடுபடும் அதிகாரிகளின் அடையாள அட்டையை சரிபார்த்தல் அவசியம். இறந்தவரின் உடலை எடுத்து செல்லும் போது இரண்டு பேர் மட்டுமே வாகனத்தில் இருக்க அனுமதிக்க வேண்டும். சடலத்துடன் வரும் நபர்கள் தேர்தல் தொடர்பான பொருட்கள், பிரசார ஆவணங்கள் வைத்துள்ளார்களா என ஆய்வு செய்ய வேண்டும்.