கோவை, மார்ச் 14:
கோவை மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை, பிளாஸ்டிக் கப், பை மற்றும் காலவதியான பழங்கள், உணவு பொருட்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இந்நிலையில், மாவட்ட கலெக்டர் ராஜாமணி மாவட்டம் முழுவதும் உணவு தரம், தடைசெய்யப்பட்ட பொருட்களின் விற்பனை தொடர்பாக ஆய்வு செய்ய உணவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து நேற்று மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு, கோவை மாநகராட்சி பகுதி, பொள்ளாச்சி, பெரியநாயக்கன்பாளையம், சூலூர் ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வினை மேற்கொண்டனர். டீ கடை, பழக்கடை, கம்பங்கூழ், மோர் விற்பனை கடைகளில் ஆய்வு நடத்தினர்.