அரூரில் ஏலச்சீட்டு நடத்தி ₹50 லட்சம் மோசடி

அரூர், மார்ச் 14: ஏலச்சீட்டு நடத்தி பணம் கட்டியவர்களிடம், பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்யப்பட்டது. இதில் பணம் கட்டியவர்கள் பணத்தை திரும்ப கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரூர் முருகன் கோயில் தெருவை சேர்ந்தவர் முனவர் பாஷா. இவர் அப்பகுதியில் மளிகை கடையுடன், ஏலச்சீட்டும் நடத்தி வந்துள்ளார். கடந்த மாதம் 2ல், முனவர் பாஷா தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகி விட்டார். இதனால், அவரிடம் ஏலச்சீட்டு கட்டி வந்த 40க்கும் மேற்பட்டோர், அதிர்ச்சியடைந்தனர். இதை தொடர்ந்து, அரூர் போலீஸ் மற்றும் தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். ஆனால், இதுவரை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டினர். இது குறித்து, அவர்கள் கூறுகையில், ‘ஏலச்சீட்டு பணம் 50 லட்சம் வரை வசூல் செய்த முனவர் பாஷா, தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகி விட்டார்.  மேலும், தனது பெயரில் சொத்துக்கள் மற்றும் பணம் இல்லை எனக்கூறி, அரூர் சார்பு நீதிமன்றத்தில் முனவர் பாஷா தெரிவித்துள்ளார். எனவே, நாங்கள் கட்டிய பணத்தை அவரிடம் இருந்து, திரும்ப பெற்றுத் தர போலீசார், நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories: