வீரவநல்லூர், மார்ச் 14: சேரன்மகாதேவி கல்வி மாவட்ட அலுவலகத்தில் வி.கே.புரம் நாடார் யூனியன் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வி.கே.புரத்தை அடுத்த முதலியார்பட்டியில் நாடார் யூனியன் நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு அரசு நிதியுதவியுடன் நடத்தப்பட்டு வருகிறது. 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு சுயநிதியில் நடத்தப்பட்டு வருகிறது. நடுநிலைப்பள்ளிக்கான தற்காலிக அங்கீகாரம், 2000ம் ஆண்டில் பெறப்பட்டது. தற்போது அங்கீகாரம் முடிந்துவிட்ட நிலையில், அங்கீகாரத்தை நீட்டிக்கக் கோரி கடந்த ஏப்.2018ல் சேரன்மகாதேவி மாவட்ட கல்வி அலுவலகத்தில் பள்ளி நிர்வாகம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அப்போது சேரன்மகாதேவி மாவட்ட கல்வி அலுவலகம் நெல்லையில் செயல்பட்டு வந்தது. தற்போது சேரன்மகாதேவிக்கு அலுவலகம் மாற்றப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் கடந்த 6 மாதமாக அங்கீகாரத்தை நீட்டிக்காமல் காலம் தாழ்த்தியுள்ளனர்.