ஆம்பூரில் தந்தை கண்ணெதிரே பரிதாபம் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மகன் பலி

ஆம்பூர், மார்ச் 14: ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு சரவணகுமார்(27), என்பவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று காலை 12 மணி அளவில் சரவணகுமார் தென்னந்தோப்பில் உள்ள தனது வீட்டு அருகே தென்னங்கீற்றுகளிலிருந்து குச்சி எடுத்து துடைப்பம் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இவரது அருகில் இவரது இரண்டரை வயது மகன் ஹரி பிரசாத் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென ஹரிபிரசாத் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தான். இதைபார்த்த சரவணகுமார் அலறி அடித்துக்கொண்டு ஓடிச்சென்று மகளை மீட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு ஹரி பிரசாத்தை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டதும் மகன் இறந்த துக்கத்தில் சரவணகுமார் கதறி அழுத காட்சி அரசு மருத்துவமனையில் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து, ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: