திருப்பூர்,மார்ச் 12:தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் ஆடைகள் கொள்முதல் செய்ய வெளிமாநில ஜவுளி வியாபாரிகள் திருப்பூர் வருவதை குறைத்துக்கொள்வார்கள் என்பதால், பின்னலாடை உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தியை குறைக்க துவங்கியுள்ளனர்.திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இதில், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பலர் டி-சர்ட், ஜட்டி, பிரா, சர்ட், லெக்கிங்ஸ், குழந்தைகள் ஆடைகள் உட்பட பல்வேறு ரகங்களில் ஆடை தயாரித்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர். ஆண்டுக்கு ரூ.17 ஆயிரம் கோடி முதல் ரூ.20 ஆயிரம் கோடிக்கு ஆடைகளை உள்நாட்டில் விற்பனை செய்கின்றனர். நேற்றுமுன்தினம் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வியாபாரிகள் பணம் கொண்டு செல்வதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். இதனால், இன்னும் சில நாட்களில் வழக்கமான வர்த்தகம் மற்றும் பண புழக்கம் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் தங்களுடைய உற்பத்தியை படிப்படியாக குறைத்துக்கொள்ள துவங்கியுள்ளனர்.
சிஸ்மா சங்க பொதுச்செயலாளர் பாபுஜி கூறியதாவது:திருப்பூரில் உற்பத்தியாகும் ஆடைகள் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஜவுளி வியாபாரிகள் ஆடை உற்பத்தி நிறுவனங்களுடன் பல ஆண்டுகளாக வரவு-செலவு இருப்பதால் ஆடைகளை கடன் கொடுத்து பல்வேறு தவணைகளில் பணத்தை வசூலிக்கின்றனர். கோடை கால ஆடை உற்பத்திக்கு வெளிமாநிலங்களில் நல்ல வரவேற்பு இருப்பதால் புதிய ஆர்டர்கள் வந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் தேர்தல் கட்டுப்பாடுகளுக்கு பயந்து, தயாரித்து அனுப்பும் ஆடைக்கான முழு தொகையை வழங்க, வர்த்தகர்கள் தயங்குவர். ஒருபகுதி தொகையை மட்டுமே, வழங்குவர். மீதமுள்ள தொகையை, தேர்தலுக்குப்பின் வழங்குவதாக கூறிவிடுவர். பின்னலாடை நிறுவனங்களின் வழக்கமான பண சுழற்சி கடுமையாக பாதிக்கப்படும். தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும்கூட, வர்த்தகத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு, ஆடை தயாரித்து அனுப்பவேண்டிய நிர்பந்தம் உள்ளது. நிதி நெருக்கடியால், நிட்டிங், டையிங், பிரின்டிங், எம்ராய்டரி என பல்வேறுவகை ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு, ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் கூலி கொடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால், பின்னலாடை தொழிலாளர்களை தக்க வைத்துக்கொள்ள பின்னலாடை உற்பத்தியாளர்கள் உற்பத்தியை குறைக்க திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.