நாகர்கோவில், மார்ச் 12: நாடாளுமன்ற தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. குமரி மாவட்டத்தில் 48 இடங்களில் அமைய உள்ள 208 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு உள்ளன. பதற்றமான வாக்கு சாவடிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை எஸ்.பி.நாத் தலைமையில் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.குறிப்பாக ரவுடிகளை முன்னெச்சரிக்கையாக கைது செய்யும் நடவடிக்கைகளை போலீசார் தொடங்கி உள்ளனர். அடிதடி மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்பு உடையவர்களிடம் பிரிவு 109, 110ன் கீழ் வழக்கு பதிவு செய்து, அவர்களை ஆர்.டி.ஓ. முன் ஆஜர்படுத்தி நன்னடத்தை சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையிலும் போலீசார் இறங்கி உள்ளனர். நன்னடத்தை சான்றிதழ் எழுதி கொடுத்தவர்கள் 1 வருடத்துக்கு எந்த வித குற்ற செயல்களிலும் ஈடுபட கூடாது. இதை மீறி குற்ற செயல்களில் ஈடுபட்டால் 1 வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். தற்போது இதற்கான நடவடிக்கைகள் அந்தந்த காவல் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளன.