நாகர்கோவில், மார்ச் 12: குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனுக்களுடன் திரண்ட மக்கள் மனுக்களை பெட்டியில் போட்டுவிட்டு திரும்பி சென்றனர். குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடப்பது வழக்கம். இந்த கூட்டத்தில் மாற்று திறனாளிகள் மற்றும் பொதுமக்கள், விவசாயிகள் என்று சுமார் 500க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளிப்பது வழக்கம். இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு, தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து வழக்கமாக நடைபெற வேண்டிய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை. நேற்று காலை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் மனுக்கள் அளிக்க இயலாது என்பது தொடர்பாக அறிவிப்புகள் கலெக்டர் அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருந்தன.