ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடக்கும் நாளில் 20 லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் சித்ரா பவுர்ணமி கிரிவலம் திருவண்ணாமலை தொகுதி தேர்தல் நடத்துவதில் சிக்கல்

திருவண்ணாமலை, மார்ச் 12: மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 18ம் தேதி, சித்ரா பவுர்ணமி கிரிவலம் அமைந்திருப்பதால், திருவண்ணாமலை தொகுதிக்கான தேர்தல் நடத்துவதில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடக்கிறது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான தேர்தல், அடுத்த மாதம் 18ம் தேதி ஒரே கட்டமாக நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தென்னிந்தியாவின் புகழ்மிக்க சிவாலயமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி கிரிவலம், மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18ம் தேதி அமைந்திருக்கிறது. சித்ரா பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம், ஏப்ரல் 18ம் தேதி இரவு 7.05 மணிக்கு தொடங்கி, 19ம் தேதி மாலை 5.35 மணிக்கு நிறைவடைகிறது. அதன்படி, 18ம் தேதி இரவு, சுமார் 20 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் 18ம் தேதி இரவு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அமைந்திருப்பதால், அன்றைய தினம் திருவண்ணாமலை தொகுதியில் நடைபெறும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வெகுவாக பாதிக்கும் என தெரிகிறது.

கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு இணையாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சித்ரா பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை வருவது வழக்கம். எனவே, தொலைதூர நகரங்களில் இருந்து திருவண்ணாமலை வரும் பக்தர்கள், தங்களுடைய வாக்குகளை செலுத்திவிட்டு வருவதில் சிக்கல், தாமதம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. மேலும், திருவண்ணாமலை தொகுதியிலும் சித்ரா பவுர்ணமியன்று வாக்குப்பதிவு வெகுவாக பாதிக்கலாம். அதோடு, தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், 20 லட்சம் பக்தர்கள் வருகை தரும் சித்ரா பவுர்ணமி விழாவுக்கான பாதுகாப்பில் கவனம் செலுத்துவதிலும் சிக்கல் ஏற்படும். அதேபோல், திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்கள், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் ஆகியவற்றில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, இரண்டு தொகுதிகளில் உள்ள 3,475 வாக்குச்சாவடி மையங்களில் இருந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வாகனங்களில் கொண்டுவந்து, திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவல நெரிசலை கடந்து வாக்கு எண்ணும் மையங்களில் சேர்ப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். எனவே, திருவண்ணாமலை தொகுதியில் தேர்தல் நடத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து, தேர்தல் ஆணையம் தனி கவனம் செலுத்த வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: