தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஆன்லைன் தேர்வு முறையில் கணினி ஆசிரியர்கள் நியமனம் ஆசிரியர் தேர்வு வாரியம் முதன்முறையாக அறிமுகம்

வேலூர், மார்ச் 12: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தமிழகத்தில் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள கணினி ஆசிரியர் தேர்வு முறைகேடுகளை தவிர்க்கும் வகையில் முதன்முறையாக ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. ஆசிரியர் தகுதி தேர்வு, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு, சிறப்பாசிரியர் தேர்வு, அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு என்று பல்வேறு போட்டித்தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இத்தேர்வுகளை எழுத விரும்பும் தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து அதற்கான விண்ணப்பங்களை பெற்று ஹால் டிக்கட்டுகளை வழங்கி தேர்வுகளை நடத்தி வந்தது. இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறையை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிமுகப்படுத்தியது. ஆன்லைனில் விண்ணப்பங்களை பெற்று, ஆன்லைன் மூலமே ஹால்டிக்கட்டுகளை விண்ணப்பதாரர்கள் பெற்று தேர்வினை எழுதி வந்தனர். இந்நிலையில் ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே மத்திய அரசின் வங்கி பணியாளர் தேர்வாணையம், ரயில்வே பணியாளர் தேர்வாணையம் உட்பட பல்வேறு மத்திய அரசின் தேர்வுகள் ஆன்லைன் முறைக்கு மாறிவிட்ட நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் இப்புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்கு, அண்மையில் நடத்தப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் எழுந்த முறைகேடு புகார்களே காரணம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 814 கிரேடு 1 கணினி பயிற்றுனர் காலி பணியிடங்களுக்கான தேர்வை முதன்முறையாக ஆன்லைன் மூலம் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பதிவு வரும் 20ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி வரை நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையொட்டி தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், அதன் பிறகு ஆன்லைன் மூலம் ஹால்டிக்கட் பதிவிறக்கம் செய்வது குறித்து அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். அனேகமாக மே மாதம் கணினி பயிற்றுனர் தேர்வு நடத்தப்பட்டு அந்த மாதமே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வரும் கல்வி ஆண்டு தொடக்கத்தில் பணி நியமனம் நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: