ஆரணி, மார்ச் 8: ஆரணியில் நடந்த உழவர் திருவிழாவில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 85 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு 262 வேளாண்மை இயந்திரங்களை அமைச்சர் வழங்கினார். ஆரணியில் மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண்மை இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். எம்பிக்கள் ஏழுமலை, வனரோஜா, எம்எல்ஏ தூசி மோகன், வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) ராஜசேகர் முன்னிலை வகித்தனர். வேளாண் துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) துரைசாமி வரவேற்றார்.