ரிஷிவந்தியம், மார்ச் 8: ரிஷிவந்தியம் அருகே பிரிவிடையாம்பட்டு கிராமத்தில் பயணிகள் நிழற்குடை பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட பிரிவிடையாம்பட்டு கிராமத்தில் கடந்த 2007ம் ஆண்டு மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் சுமார் 60 ஆயிரம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இதனை இப்பகுதி மக்கள் கடந்த 9 வருடமாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த பயணிகள் நிழற்குடை மிகவும் பழுதடைந்து பயணிகள் வந்து நிற்பதற்கு கூட முடியாமல் சிமெண்ட் கான்கிரீட் உடைந்து தலைமேல் விழும் நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் நிழற்குடையினுள் நிற்பதை பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக பயணிகள் நிழற்குடையை இடித்துவிட்டு புதிதாக கட்டிதரவேண்டும் என்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.