கடன் பிரச்னையில் பெண்ணை தாக்கிய தம்பதிக்கு வலைவீச்சு

புதுச்சேரி,  மார்ச் 8: அரியாங்குப்பம் அருகே கடன் பிரச்னையில் பெண்ணை  உருட்டுக்கட்டையால் தாக்கிய தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுவை,  அரியாங்குப்பம், வன்னியர் வீதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி செல்வி  (46). கணவரை பிரிந்த இவர் அதே பகுதியைச் சேர்ந்த மீனவர்  சுந்தரமூர்த்தியிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கியிருந்தாராம். இதுதொடர்பாக  சமீபகாலமாக அவர்களுக்குள் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்ததாக  கூறப்படுகிறது. இதுபற்றி சுந்தரமூர்த்தி தனது உறவினர் ஜெயராமனிடம்  தெரிவித்துள்ளார். இதையடுத்து வீராம்பட்டினம், சுனாமி குடியிருப்பு  பகுதியில் வசிக்கும் ஜெயராமன் சம்பவத்தன்று தனது மனைவியுடன், செல்வி  வீட்டிற்கு சென்று சுந்தரமூர்த்தி கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.  அவர் மறுத்த நிலையில், ஆத்திரமடைந்த தம்பதி உருட்டுகட்டையால் செல்வியை  தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுகுறித்து செல்வி அளித்த  புகாரின்பேரில் ஜெயராமன் மற்றும் அவரது மனைவி மீது 4 பிரிவுகளின்கீழ்  வழக்குபதிந்த அரியாங்குப்பம் போலீசார், தம்பதியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: