புதுச்சேரி, மார்ச் 8: பாஜக மாநில தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய பாஜக அரசு ஏழை, எளிய மக்களுக்கு பயன்தரும் வகையில் ஆயுஷ்மான் என்ற இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.5 லட்சம் வரை இழப்பீடு பெற முடியும். தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு இதனை நடைமுறைப்படுத்தவில்லை. இத்திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 3 ஆயிரம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டும், தேர்தலுக்காக பழிவாங்கும் நடவடிக்கையாக இத்திட்டத்தை அமல்படுத்தவில்லை. முதல்வர் நிவாரண நிதி, உண்மையான தகுதியான பயனாளிகளுக்கு வழங்கப்படுவது இல்லை. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டும் அவர்களுக்கு இடம் ஒதுக்கவில்லை. இவ்வாறு அவர்
கூறினார்.