புதுச்சேரி, மார்ச் 8: அரியாங்குப்பம் மார்க்கெட் அருகே தாறுமாறாக ஓடிய கார் மோதி 2 கார்கள், பைக் சேதமடைந்தன. இந்த விபத்தில் வியாபாரிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். புதுச்சேரி, அரியாங்குப்பம், புதியபாலம் பைபாஸ் சாலை, மார்க்கெட் ரோடு சந்திப்பில் 4 சக்கர வாகனம் பழுதுபார்க்கும் மெக்கானிக் ஷெட் உள்ளது. இங்கு பழுதுபார்க்க வேண்டிய கார்கள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனிடையே நேற்று மதியம் புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வேகமாக வந்த ஒரு கார், அரியாங்குப்பம் மார்க்கெட் ரோடு சந்திப்பு அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் மெக்கானிக் ஷெட் அருகே நின்ற 2 கார் மற்றும் ஒரு பைக் மீது மோதி பின்னர் மரத்தில் இடித்து நின்றது.அதில் விபத்துக்கு காரணமான காரின் முன்பகுதி மட்டுமின்றி அந்த வாகனம் இடித்ததில் மற்ற 2 கார்களின் பின்புற பகுதிகளும் சேதமடைந்தது. விபத்தின்போது அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த நிலையில் வியாபாரிகள் உள்ளிட்ட யாரும் இடிபாடுகளில் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் அரியாங்குப்பம் போலீசாரும், ரூரல் டிராபிக் போலீசாரும் விரைந்து வந்து போக்குவரத்தை சரிசெய்தனர். பின்னர் விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பதற்றம் நிலவியது.