வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடும் அவதி

விழுப்புரம், மார்ச் 7: விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயிலின் அளவு சதத்தை தொட்ட நிலையில் விழுப்புரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் அளவு 93 டிகிரி முதல் 97 டிகிரி வரையில் பதிவாகி இருந்தது. கடந்த 2 நாட்களாக விழுப்புரத்தில் வெயிலின் கொடுமை அதிகமாக இருந்தது. கடந்த இருநாட்களாக வெயிலின் அளவு சதத்தை தொட்டுள்ளது. நேற்று முன்தினம் 100 டிகிரியும், நேற்று 101 டிகிரி வரை வெயிலின் அளவு பதிவாகியிருந்தது. நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேரம் செல்ல, செல்ல வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. மாலை வரை வெயிலின் தாக்கம் இருந்தது. சாலையில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர். சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் குடை பிடித்தபடியும், முகத்தில் கண்கள் மட்டும் தெரியும்படி துணிகளை கட்டிக்கொண்டும், பெண்கள் துப்பட்டா மற்றும் சேலையால் தலையில் போர்த்தியபடியும் இரு சக்கர வாகனங்களில் சென்றனர்.வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பெரும்பாலானோர் வெளியே தலைகாட்ட முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தனர். இதனால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் விழுப்புரம்- புதுச்சேரி சாலை, கே.கே.சாலை, எம்.ஜி.சாலை, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, திரு.வி.க. சாலை உள்ளிட்ட சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் சாலையோரங்களில் கரும்புச்சாறு, நுங்கு, பழச்சாறு, தர்பூசணி, வெள்ளரிப் பழங்களை விற்பனை செய்ய புதிது, புதிதாக கடைகள் முளைத்துள்ளன. அந்த கடைகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.  அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரிவெயில் தொடங்கும் முன்பே வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Related Stories: