வேலி அமைப்பதில் தகராறு விவசாயிக்கு சரமாரி அடி

திருக்கனூர், மார்ச் 7:  திருக்கனூர் அருகே வேலி அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் விவசாயிக்கு சரமாரி அடி விழுந்தது. இது தொடர்பாக 2 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். திருக்கனூர் அடுத்த செட்டிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரவி. விவசாயி. இவருக்கு சொந்தமான நிலம், திருக்கனூர் மெயின் ரோடு கூனிச்சம்பட்டில் உள்ளது. இவரது இடத்தின் அருகே திருக்கனூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது நிலம் உள்ளது. இருவருக்கும் நிலப்பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தி தனது நிலத்தில் சிமெண்ட் கம்பம் நட்டு வேலி அமைத்துள்ளார். இதனை ரவி தடுத்தபோது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. முறையாக அளவீடு செய்து, அதன்பின் வேலி அமைத்துக் கொள்ளுமாறு ரவி கூறியுள்ளார். இதற்கு கிருஷ்ணமூர்த்தி மறுத்துள்ளார். மேலும் அவரும், அவரது டிரைவர் விஸ்வநாதனும் சேர்ந்து ரவியை சரமாரி தாக்கியுள்ளனர். காயமடைந்த அவர், திருக்கனூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். ஏஎஸ்ஐ அமிர்தலிங்கம் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: