திருப்பூர்,பிப்.14:திருப்பூர் மாநகரில் கோடை துவங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்த துவங்கி விட்டது. பகல் நேரத்தில் சூரியன் சுட்டெரிப்பதால் மாநகர மக்கள் வெயிலின் தாக்கத்தால் கடும் அவதியடைந்து வருகின்றனர். வெப்பத்தின் தகிப்பு காரணமாக மாநகரில் நுங்கு கடைகள், இளநீர், கம்பங்கூழ் விற்பனை சூடு பிடித்துள்ளது. கோடைக்கு இதமான தர்பூசணி பழங்களின் விற்பனையும் சூடுபிடித்துள்ளதால் வெளியூர்களில் இருந்து தர்பூசணி பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. இதுபோக குளிர்பான கடைகளில் ஐஸ்கிரீம் மற்றும் பழ ஜூஸ் ரகங்களின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.
என்னதான் கோடையை குளுமைப்படுத்துவதற்காக குளிர்பானங்கள் குவிந்தாலும், கோடையில் மண்பானைத் தண்ணீரை பருக வேண்டும் என்பதற்காக ஆர்வத்துடன் மண்பானையை வாங்கி செல்வோர் அதிகமாக உள்ளனர். திருப்பூர் மாநகரில் மண்பானை விற்பனை செய்யும் கடைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. பழைய பஸ் நிலையம், காங்கயம் ரோடு, புதிய பஸ் நிலையம் போன்ற பகுதிகளில் மண்பானை விற்பனை சூடுபிடித்துள்ளது. ஒரு மண்பானை ரூ.120 முதல் ரூ.300 வரை அளவுக்கேற்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.