காயமடைந்த சிறுத்தையின் உடல்நிலையில் முன்னேற்றம்

பந்தலூர், பிப்.14 : பந்தலூர் அருகே வீட்டில் பிடிப்பட்ட சிறுத்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

 பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரகத்திற்குட்பட்ட பாட்டவல் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் ரயான் என்பவரின் வீட்டிற்குள் சிறுத்தை புகுந்தது.  இதையடுத்து வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். இதில் சிறுத்தைக்கு காயம் ஏற்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பிடிப்பட்ட சிறுத்தையை பிதர்காடு வனச்சரக அலுவலக வளாகத்தில் கூண்டில் வைத்து கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். தற்போது அந்த சிறுத்தை குணமடைந்து நல்லமுறையில் உள்ளது.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்: ‘சிறுத்தையின் உடல் நிலை தேறி வருகிறது. பூரண குணம் அடைந்தபின் சிறுத்தை எங்கு கொண்டு சென்று பராமரிப்பது குறித்து முடிவெடுக்கப்படும். ஒரு வயது சிறுத்தை என்பதால் அது மீண்டும் தாயுடன் சேர்ந்து இருப்பது நல்லது. வனவிலங்கு ஆர்வலர்கள்  வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்று பராமரிக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனால்  மீண்டும் வனப்பகுதியில் சிறுத்தையை விடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: