ஊட்டி, பிப். 14: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு, பார்சன்ஸ்வேலி, மார்லிமந்து, கோரிேசாலா, டைகர்ஹில், கிளன்ராக், ஓல்டு ஊட்டி, அப்பர் தொட்டபெட்டா, லோயர் தொட்டபெட்டா, அப்பர் கோடப்பமந்து, லோயர் கோடப்பமந்து ஆகிய அணைகளில் இருந்து குடிநீர்் விநியோகம் செய்யப்படுகிறது. நீலகிரியில் பார்சன்ஸ்வேலி அணையே பிரதான குடிநீர் ஆதரமாக இருகிறது. இங்குள்ள இரு ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு, ஊட்டி நகரில் உள்ள மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. பொதுவாக கோடை காலங்களில் ஊட்டி நகரில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம். இது போன்ற சமயங்களில் லாரிகள் மூலமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கி தென்மேற்கு பருவமழை தொடர்ந்து 4 மாதங்களாக மழை பெய்தது. இதனால், பெரும்பாலான அணைகளில் தண்ணீர் இருப்பு குறையாமல் உள்ளது. குறிப்பாக, பார்சன்ஸ்வேலி, டைகர்ஹில் மற்றும் மார்லிமந்து போன்ற அணைகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் இம்முறை கோடை காலத்தின் போது குடிநீர் தட்டுபாடு ஏற்பட வாய்ப்பில்லை. இதனால், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, கோடை சீசனுக்காக ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.