தர்மபுரி, பிப்.14: தர்மபுரி மாவட்டத்தில் மீண்டும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தர்மபுரி மாவட்டத்தில், தமிழக அரசின் உத்தரவுப்படி கடந்த ஜனவரி 1ம் தேதி முதல், பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டது. ஒரு மாதம் கடந்த நிலையில், மீண்டும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. தர்மபுரி நகராட்சி, பென்னாகரம், ஒகேனக்கல், பாப்பாரப்பட்டி, மாரண்டஅள்ளி, கம்பைநல்லூர், கடத்தூர், பொம்மிடி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் தலைதூக்கியுள்ளது. மறைவான இடங்களில் வைத்து, பிளாஸ்டிக் வினியோகம் செய்கின்றனர். பாலக்கோடு பேரூராட்சி பகுதியிலும் மீண்டும் பிளாஸ்டிக் பைகள் புழக்கத்தில் வந்துள்ளன. தற்போது வழக்கம் போல வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உணவகங்களிலும், தங்கு தடையின்றி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. பேரூராட்சி அதிகாரிகள் இதை கண்காணித்து பிளாஸ்டி பைகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.