ஈரோடு, பிப். 14: ஈரோடு மாவட்டத்தில் இ-சேவை மையங்களில் அடிக்கடி சர்வர் பிரச்னை ஏற்படுவதால் சேவைகள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் பொது இ-சேவை மையங்கள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்கள் மட்டுமின்றி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த சேவை மையங்கள் மூலம் வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், கணவரால் கைவிடப்பட்டோர் சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர வாக்காளர் அடையாள அட்டை புதியதாக எடுப்பது, திருத்தம் உள்ளிட்ட பணிகள் தனியாக நடந்து வருகிறது. இ-சேவை திட்டத்தினால் பொதுமக்கள் சான்றிதழ் பெறுவது எளிதாக்கப்பட்டுள்ள நிலையில் அடிக்கடி ஏற்படும் சர்வர் பிரச்னையால் விண்ணப்பிக்க பல மணி நேரம் சேவை மையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.