கோவை,பிப்.14: உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், ரோஜா மலர்களை வாங்க யாரும் ஆர்வம் காட்டுவதில்லை என்கின்றனர் பூ வியாபாரிகள்.
காதலர்கள் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொள்ளும் விதமாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், மனதுக்கு பிடித்தவருக்கு ரோஜா மலர் மற்றும் அன்பளிப்புகளை கொடுப்பது வழக்கம். ஆண்டுதோறூம் காதலர் தினத்திற்கு முந்தய தினத்தில் ரோஜா மலர்களுக்கு கடும் கிராக்கி நிலவும், அதோடு அதன் விலையும் அதிகமாக இருக்கும்.
ஆனால், இந்தாண்டு ரோஜா மலர்கள் விற்பனை மந்தகதியில் இருப்பதாக பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பூமார்க்கெட் பகுதியை சேர்ந்த பூ விற்பனையாளர் ராமச்சந்திரன் கூறியதாவது: காதலர் தினத்தை முன்னிட்டு பெங்களூர் ரோஜா மலர்கள் அதிகம் விற்பனையாகும். சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு உள்ளிட்ட பல வண்ணங்களில் கிடைக்கும் பெங்களூர் ரோஜா ஒன்று காதலர் தினத்தன்று ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையாகும். ஆனால், இந்தாண்டு ரோஜா விற்பனை சூடு பிடிக்கவில்லை.
தற்போது ஒரு ரோஜா மலர் ரூ.20க்கு தான் விற்பனையாகிறது. விலை குறைவாக இருந்தாலும் வாங்க ஆளில்லை. இவ்வாறு அவர் கூறினார்.