சூலூர்.பிப்.14: கேரளாவிற்கு கடத்த இருந்த 50 டன் மணலுடன் லாரி சூலூரில் பிடிபட்டது.
சூலூர் அருகே சிந்தாமணிப்புதூர் பைபாஸ் ரோட்டில் நேற்று காலை சூலூர் காவல் உதவி ஆய்வாளர் குமரேசன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டாரஸ் லாரி ஒன்று போலீசை கண்டதும் உடனடியாக நிறுத்தி திரும்பிச் செல்ல முயற்சித்துள்ளது. அதைத் தொடர்ந்து சந்தேகமடைந்த போலீசார் லாரி அருகே சென்ற போது லாரியை விட்டுவிட்டு டிரைவர் தப்பியோடியுள்ளார். தொடர்ந்து லாரியை சோதனை செய்த போது அதில் உரிய அனுமதியின்றி ஆற்று மணல் ஏற்றி கேரளாவிற்கு கடத்த இருந்தது தெரியவந்தது. போலீசார் உடனடியாக சூலூர் வட்டாட்சியர் ஜெகதீசனுக்கு தகவல் தெரிவித்துவிட்டு லாரியைப் பறிமுதல் செய்தனர். ஏற்கனவே ஒரு மணல் கடத்தல் லாரி பறிமுதல் செய்து சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.