கரூர், பிப்.14: கரூர் தாந்தோணிமலை குடியிருப்பு பகுதியின் வழியாக செல்லும் காட்டு வாய்க்காலில் சாயப்பட்டறை கழிவுகள் கலக்க விடப்படுவதால் இந்த பகுதி மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.செல்லாண்டிபாளையம் பகுதியில் இருந்து ராயனூர், தாந்தோணிமலை சிவசக்தி நகர், மில்கேட் வழியாக காட்டு வாய்க்கால் செல்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த காட்டு வாய்க்கால் மூலம் அதிகளவு நிலங்கள் பாசன வசதியை பெற்று வந்தன. தற்போதைய நிலையில் தண்ணீர் வராததால் எந்த நேரமும் வறண்ட நிலையிலேயே இருந்து வருகிறது. காட்டு வாய்க்கால் பயணிக்கும் சிவசக்தி நகர், மில்கேட் போன்ற பகுதிகளை சுற்றிலும் தற்போதைய நிலையில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உருவாகியுள்ளன. இந்த பகுதியில் உள்ள ஒரு சில சாயப்பட்டறைகளின் கழிவுகள் வேறு இடங்களில் கடந்த பல ஆண்டுகளாக கொண்டு செல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு ஆண்டாக, குடியிருப்பு வளாகங்களின் வழியாக செல்லும் காட்டு வாய்க்காலில் கலக்க விடப்படுவதாக இந்த பகுதியினர் கூறுகின்றனர். சாயப்பட்டறை கழிவுநீர் காட்டு வாய்க்காலில் செல்வதால் இந்த பகுதியினர் குடியிருக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். கொசுத்தொல்லை, துர்நாற்றம் போன்றவற்றாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதோடு நோய் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருந்து வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு நோய் தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும், இந்த பகுதியை சுற்றிலும் போர் போட்டாலும் தண்ணீருக்கு பதில் நுரைதான் அதிகளவு வெளியேறுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலை குறித்து இப்பகுதியினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு பலமுறை எடுத்துச் சென்றும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் செய்வதறியாது விரக்தியில் உள்ளனர். இதுபற்றி போர்க்கால நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என பகுதி மக்கள் எண்ணுகின்றனர்.