குலசேகரம், பிப். 14: கோதையாறு அருகே அரசு ரப்பர் கழக காட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 600 ரப்பர் மரங்கள் கருகின.குமரி மாவட்டத்தில் இலையுதிர் காலம் நிலவும் நிலையில் மரங்கள் அனைத்தும் இலைகளை உதிர்த்து வருகின்றன. இதனால் வனங்களிலும், ரப்பர் காடுகளில் இலைச் சருகுகள் நிறைந்து காணப்படுகின்றன. மேலும் மழையின்றி கடும் வறட்சியான காலநிலை நிலவுவதால் காடுகளிலுள்ள செடி, கொடி மற்றும் புதர்கள் அனைத்தும் காய்ந்து கரிந்த நிலையில் உள்ளன. வெப்பத்தின் தாக்கம் காரணமாகவும், சருகுகளையும், புதர்களையும் அகற்றும் வகையில் சிலர் தீ ஏற்படுத்துவதாலும் காடுகளில் தீ பரவுகின்றன.இந்நிலையில் அரசு ரப்பர் கழகம் கோதையாறு கோட்டம் கல்லாறு பிரிவு, கிளவியாறு சரக ரப்பர் காட்டில் நேற்று முன்தினம் திடீரென்று தீ ஏற்பட்டு ரப்பர் காட்டுக்குள் வேகமாக பரவியது. இதையடுத்து தொழிலாளர்கள் ரப்பர் கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். எனினும் காட்டுக்குள் தீ அணைப்பு வாகனங்களைக் கொண்டு செல்ல முடியாததால் தீயை அணைக்க முடியவில்லை. இதனால் சுமார் 600 மரங்கள் வரை தீயில் கருகியதாகக் கூறப்படுகிறது.