நாகர்கோவில், பிப்.14: ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்த போது கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் அரசு பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப் பட்டனர். குமரி மாவட்டத்தில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் தியாகராஜன், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழக பொதுசெயலாளர் பெனின் தேவகுமார், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில், மாவட்ட பொருளாளர் சுமஹாசன் ஆகிய 4 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இந்தநிலையில் சஸ்பென்ட் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது.