புதுச்சேரி, பிப். 14: பிளாஸ்டிக் தடை சட்டத்தால் ஒன்றரை லட்சம் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், புதுவையில் பிளாஸ்டிக் தடை மார்ச் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. ஏற்கனவே இதே தடை சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு இருப்பதால் அங்கு ஏற்கனவே வணிகமும், வணிகர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியிலும் அதேபோன்ற பிளாஸ்டிக் தடை சட்டத்தை அமல்படுத்தினால் இங்குள்ள சிறு, குறு வியாபாரிகளும், ஓட்டல் நடத்துபவர்களும், உணவுபொருள் தயாரிப்பவர்களும் பெரும் தொழில் இழப்புக்கு ஆளாவார்கள். மேலும், இச்சட்டம் முழுமையாக உள்ளூரில் உள்ள வணிகர்களை முடக்குவதற்கு நிகராக உள்ளது. அதேநேரம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இத்தடைச்சட்டம் சாதகமாக இருக்கிறது. எனவே பிளாஸ்டிக் தடையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, ஒரு குழு அமைத்து என்னென்ன பொருட்களை தடை செய்யலாம் என ஆராய்ந்து நெறிப்படுத்திய பின் கொண்டு வரலாம்.