சிவகிரி, பிப். 14: தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தால் கடந்த 1995ம் ஆண்டு வாசுதேவநல்லூர் காவல் நிலைய வளாகத்தில் தரைத்தளம், முதல் தளம், 2ம் தளத்தில் தலா 2 வீடுகள் என மொத்தம் 6 வீடுகள் கொண்ட அடுக்குமாடி காவலர் குடியிருப்பு கட்டப்பட்டது. இருப்பினும் 24 ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பும் செய்யப்படாததால் குடியிருப்பானது பாழடைந்ததோடு இடிந்து விழும் நிலையில் உள்ளது. இவ்வாறு ஆபத்தான நிலையிலும் இங்குள்ள 6 வீடுகளில் போலீசார் குடும்பத்தோடு தங்கியிருப்பது குறித்த செய்தி தினகரனில் நேற்று படத்துடன் வெளியானது. இதையடுத்து அங்கு குடியிருந்து வரும் போலீசாரை உடனடியாக வீடுகளை காலிசெய்து வெளியில் வாடகை வீட்டில் தங்கிக் கொள்ள புளியங்குடி டிஎஸ்பி சக்திவேல் வாய்மொழியாக உத்தரவிட்டார். அத்துடன் அதற்கான மாத வாடகையை அரசு சார்பில் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இதை வரவேற்றுள்ள காவலர்களும், அவர்களும் குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் டிஎஸ்பியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.