சங்கரன்கோவில். பிப். 14: சங்கரன்கோவிலை வருவாய் கோட்டமாக அறிவிக்கக் கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நெல்லை மேற்கு மாவட்ட திமுக சார்பில் சங்கரன்கோவிலை தனி வருவாய் கோட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்கோவில் முப்புடாதி அம்மன் திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு மாவட்டச் செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் முத்துபாண்டி, முன்னாள் அமைச்சர் தங்கவேல், முன்னாள் எம்எல்ஏ ரசாக், திமுக பிரமுகர் தொழிலதிபர் அய்யாத்துரை பாண்டியன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திரளாகப் பங்கேற்றோர், சங்கரன்கோவிலை தனி வருவாய் கோட்டமாக அறிவிக்கவேண்டும், சொத்துவரி, வீட்டுவரி, தண்ணீர் வரி உயர்வை ரத்து செய்யவேண்டும், ராஜபாளையம் ரோடு என்ஜிஓ காலனி அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்கபடவேண்டும், புதிய பஸ் நிலையம் அருகே குவிந்துகிடக்கும் குப்பைகளை அகற்றவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் ஊர்வலமாக சென்று சங்கரன்கோவில் தாசில்தாரிடம் கோரிக்கைகள் தொடர்பான மனு அளித்தனர். மேலும் திமுக சார்பில் நடத்தப்பட்ட கிராமசபை கூட்டங்களில் முதியோர் உதவித்தொகை கிடைக்காமல் தவிப்பதாக வந்துள்ள மனுவையும் தாசில்தாரிடம் அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அப்போது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் உறுதியளித்தார்.