சத்தியமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் பலி

சத்தியமங்கலம், பிப்.13: சத்தியமங்கலம் அருகே நடந்து சென்றவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலியாகினர்.

சத்தியமங்கலம் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன கண்ணன். இவரது மனைவி பார்வதி (65). இவர்களது மகள் பண்ணாரி (38) மகன் ஜோதி (35).

பார்வதி, மகள் பண்ணாரி, மகன் ஜோதி மூவரும் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் சத்தியமங்கலம்- அத்தாணி சாலையில், எம்ஜிஆர் நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் மீது மோதியது. இதில், 3 பேரும் காயம் அடைந்தனர்.

சத்தியமங்கலம் போலீசார் 3 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் பார்வதி, பண்ணாரி இருவரும் பலியாகினர்.

ஜோதி, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: