காஸ் சிலிண்டர் வெடித்து தம்பதி பரிதாப பலி

பொள்ளாச்சி, பிப்.13:  பொள்ளாச்சி அருகே, சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து  கணவன், மனைவி இறந்தனர்.

   பொள்ளாச்சி அருகே ராசக்காபாளையத்தில் உள்ள திருமலைகார்டன் பகுதியை  சேர்ந்தவர் சண்முகவடிவேல்(80), ஓய்வுபெற்ற பள்ளி தலைமை ஆசிரியர். இவரது  மனைவி கிருஷ்ணவேணி(60).இவர்களுக்கு லட்சுமிதேவி (45), என்ற மகளும்,  சக்திசரவணன் (42) என்ற மகனும் உள்ளனர். சிவில் இன்ஜினியரான சரவணனுக்கு  கடந்த 5 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. ராசக்காபாளையத்தில் வீடு கட்டுவதற்காக அதன் அருகேயே ஒரு குடிசை வீட்டில்  சண்முகவடிவேல், கிருஷ்ணவேணி, லட்சுமிதேவி ஆகியோர் வசித்து வந்தனர்.இந்நிலையில் நேற்று மதியம், சண்முகவடிவேல் வசிக்கும் வீட்டின் அருகே  காய்ந்து  கிடந்த செடியில் திடீர் என தீப்பிடித்தது. அருகே உள்ள  சண்முகவடிவேல் குடிசைக்கும் மளமளவென தீ பரவியது. இதைபார்த்த வீட்டிலிருந்த  லட்சுமிதேவி சத்தம்போட்டபடியே வெளியே ஓடினார்.

ஆனால், கண்பார்வை  குறைந்த சண்முகவடிவேல், சரியாக நடக்க முடியாத  கிருஷ்ணவேணி ஆகியோர்  வீட்டிலிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். சிறிதுநேரத்தில், வீட்டின்  அனைத்து பகுதியிலும் தீபற்றியதால், அங்கிருந்த சமையல் காஸ் சிலிண்டர்  வெடித்து சிதறியது.  தகவலறிந்த தீயணைப்புதுறையினர் விரைந்து வந்து 1 மணி  நேரம் ேபாராடி தீயை அணைத்தினர். உள்ளே சென்று பார்த்தபோது சண்முகவடிவேல்,  கிருஷ்ணவேணி ஆகிய இருவரும் உடல் கருகி இறந்து கிடந்தனர்.

மகாலிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: