ஜலகண்டாபுரத்தில் பைக் திருடிய 2 வாலிபர்கள் கைது

ஜலகண்டாபுரம், பிப்.13:  ஜலகண்டாபுரத்தில் நள்ளிரவு பைக் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கைது செய்து விசாரணை நடத்திய போலீசார், 15 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். சேலம் மாவட்டம் மேச்சேரி, நங்கவள்ளி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி, ஜலகண்டாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த மூன்று ஆண்டுகளாக இரவு நேரங்களில் வீடுகள் மற்றும் கடைகளின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் திருட்டு போவது வழக்கமாக இருந்துவந்தது.  இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு வந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன், ஜலகண்டாபுரத்தில் நள்ளிரவு நேரத்தில் இரண்டு வாலிபர்கள் டூவீலரை திருடிய போது, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பிடித்து வந்து ஜலகண்டாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் மாட்டுவாயன் வளவு இருப்பாளியை சேர்ந்த தங்கமணியின் மகன்  சுரேஷ்குமார்(27), மற்றும் ஆவடத்தூர் கட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த செல்வராஜ் மகன்  சக்திவேல் (22) என தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் இரண்டு பேரும் சேர்ந்து, சேலம்  மாவட்டத்தில் பல பகுதிகளில் பைக்கு திருடியது தெரியவந்தது.இதையடுத்து இரண்டு பேரையும்  ஒமலூர் டிஎஸ்பி பாஸ்கரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மேச்சேரி, நங்கவள்ளி, கொங்கணபுரம்,  ஜலகண்டாபுரம், பூலாம்பட்டி பகுதிகளில் திருடிய வாகனத்தை  வெவ்வேறு பகுதிகளில் ₹1000 முதல் ₹5000 வரை அடகு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 15 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அறிந்த பொதுமக்கள், போலீசார் பறிமுதல் செய்த வாகனம், காணாமல் போன தங்களது வாகனமா என நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர். இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், இருவர் மீதும் வேறு எதேனும் பகுதிகளில் நடந்த பைக்கு திருட்டு வழக்குகளில் தொடர்பு இருக்கிறதா என விசாரித்து வருகின்றனர்.

Related Stories: