சேலம், பிப்.13: சேலத்தில் தர்ணா நடத்திய பெண்ணை கைது செய்த இன்ஸ்பெக்டரை அவர் வளர்த்த பாசக்கார நாய் கடித்து குதறியது. சேலத்தை அடுத்துள்ள சேலத்தாம்பட்டி பாவாயிவட்டம் மீன்வாயன்ஓடை பகுதியை சேர்ந்த செல்வராஜ் மனைவி மஞ்சுளா (31), கடந்த 9ம் தேதி உயிரிழந்தார். அவரது உடலை எடுத்துச் செல்ல, அந்த பகுதியில் பழனிவேல் என்பவரது இடத்தில் பொதுவழித்தடம் ஏற்படுத்தி தர வேண்டும் எனக்கோரி, அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை, ஆர்டிஓ செழியன் தலைமையிலான வருவாய்த்துறையினர் பிரச்னைக்குரிய இடத்தில் 4 அடிக்கு வழித்தடத்தை எடுத்து வழங்குவதாக தெரிவித்தனர். அதன்படி அந்த நிலத்தில், பொக்லைன் இயந்திரம் மூலம் வழித்தடம் ஏற்படுத்தப்பட்டது. அப்போது நிலத்தின் உரிமையாளரான பழனிவேலின் மனைவி தங்கம்மாள் (65), அவரது மருமகள்கள் அஞ்சலை (42), ராமாயி (40), கண்மணி (33) ஆகிய 4 பேரும் நிலத்தை எடுக்க விடமாட்டோம் எனக்கூறி பொக்லைன் இயந்திரம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.