மரம் விற்ற விவகாரத்தில் தகராறு வியாபாரிக்கு அரிவாள் வெட்டு விவசாயிக்கு போலீஸ் வலைவீச்சு

ஏற்காடு, பிப்.13:ஏற்காட்டில் மரம் விற்ற விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் வியாபாரியை அரிவாளால் வெட்டிய விவசாயியை போலீசார் தேடி வருகின்றனர்.சேலம் மாவட்டம் ஏற்காடு செங்கலத்துப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னமணி மகன் பாலகிருஷ்ணன் (36). மர வியாபாரி. இவர், அந்த பகுதியை சேர்ந்த விவசாயி தங்கவேல் என்பவரிடம் மரம் வாங்கிக்கொள்வதாக ₹3 ஆயிரம் முன்பணம் கொடுத்துள்ளார். சுமார் ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும், பேசியபடி மரத்தை விற்பனை செய்யாமல் தங்கவேல் இருந்துள்ளார்.இந்நிலையில் நேற்று பாலகிருஷ்ணன், தங்கவேலின் வீட்டிற்கு சென்று மரத்தை விற்பனை செய்யாவிட்டால், வாங்கிய ₹3 ஆயிரம் பணத்தை திரும்ப கொடு எனக்கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் பாலகிருஷ்ணன் தனது வீட்டிற்கு வந்து விட்டார்.

சிறிது நேரத்தில் பாலகிருஷ்ணனின் வீட்டிற்கு தங்கவேல் வந்துள்ளார். அவர், மீண்டும்  தகராறு செய்து, மறைத்து வைத்திருந்த அரிவாளால் பாலகிருஷ்ணனை வெட்டினார். அதில், கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் வழிந்தநிலையில் கீழே விழவும், தங்கவேல் தப்பியோடிவிட்டார். அக்கம்பக்கத்தினர், பாலகிருஷ்ணனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி ஏற்காடு இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். தலைமறைவான தங்கவேலை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: