தா.பழூர் கடை வீதியில் வைக்கோல் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் மின் கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம்

தா.பழூர், பிப். 13: தா.பழூர் கடைவீதியில் வைக்கோல் ஏற்றிய லாரிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் மின் கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகி உள்ளது.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் தற்போது அறுவடை நடைபெற்று வருவதால் வைக்கோல் வியாபாரம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வைக்கோல் வியாபாரிகள் டிராக்டர் மற்றும் லாரிகளில் அதிகப்படியான வைக்கோலை ஏற்றி சாலைகளில் செல்லும்போது தா.பழூர் கடைவீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

அதிகப்படியான வைக்கோல் ஏற்றிச்செல்வதால் வாகனங்களின் முகப்பு கண்ணாடியை பார்த்து செல்ல முடியாத நிலையும் உருவாகிறது. மேலும் மேலே மின்கம்பங்கள் இருப்பதனாலும் வைக்கோல் வாகனங்கள் ஊர்ந்து செல்ல கூடிய நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது அணைக்கரை பாலம் பழுதடைந்துள்ள நிலையில் கும்பகோணத்தில் இருந்து மதனத்தூர் பாலம் வழியாக ஜெயங்கொண்டம் முதல் சென்னை வரை கார், லாரி மற்றும் பேருந்துகள் அதிகப்படியாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே இதனை சரி செய்ய போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: