துறையூரில் சாலை பாதுகாப்பு வார விழா

தா.பேட்டை, பிப்.13:  துறையூரில்  சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி போலீசார் ஆட்டோ, வாடகை கார், வேன்  வாகன விற்பனை முகவர்கள் தங்களது வாகனங்களுடன் விழிப்புணர்வு பேரணியில்  பங்கேற்றனர்.

துறையூரில் சாலை பாதுகாப்பு வாரவிழா கடந்த 4ம் தேதி  முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு  பேரணிக்கு துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் தலைமை வகித்தார்.  பேரணி பாலக்கரை, பெரம்பலூர் ரோடு, திருச்சி  ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகள்  வழியாக சென்று பயணியர் மாளிகையில் நிறைவடைந்தது. பேரணியில் தலைக்கவசம்,  சீட்பெல்ட் அணிவதின் அவசியம், சாலை பாதுகாப்பு விதிகள் உள்ளிட்ட  விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம்  விநியோகிக்கப்பட்டது. அப்போது போலீசார் தலைக்கவசம் அணிந்து இருசக்கர  வாகனத்திலும், ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோவிலும், கார், வேன் உரிமையாளர்கள்,  வாகன விற்பனை முகவர்கள் உள்ளிட்டோர் தங்களது வாகனங்களிலும் சாலை விதிகளை  பின்பற்றி பேரணியில் பங்கேற்றனர். துறையூர் போலீசார் மற்றும் வட்டார  போக்குவரத்து அலுவலகம் இணைந்து பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.

Related Stories: