புதுச்சேரி, பிப். 13: புதுச்சேரி முதல்வர் நாராயண
சாமிக்கு, ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி சின்ன சுப்புராயப்பிள்ளை அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் வருட வாடகை செலுத்தி, புதுச்சேரி நகராட்சியின் குபேர் திருமண நிலையம் ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடற்கரையில் செயல்பட்டு வந்த புதுச்சேரி நகராட்சி கட்டிடம் சேதமடைந்த காரணத்தால் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பிரிவு, வருவாய் பிரிவு-2 ஆகியவை கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் தற்காலிகமாக குபேர் திருமண நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு, இரு பிரிவும் அங்கேயே தொடர்ந்து செயல்பட்டு வந்தன. திடீரென உப்பளம் தொகுதி எம்எல்ஏ, நகராட்சியின் இரு பிரிவுகளை காலி செய்துவிட்டு திருமண நிலையத்தை மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று போராட்டம் நடத்தினார். இதன் காரணமாக 2017ம் ஆண்டு முதல் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பிரிவு முதலியார்பேட்டை நகராட்சி அலுவலகத்திற்கும், வருவாய் பிரிவு-2 மாத வாடகைக்கு வர்த்தக சபை கட்டிடத்திற்கும் இடமாற்றம் செய்துவிட்டனர்.