புதுச்சேரி, பிப். 13: சுற்றுலா வளர்ச்சிக்கழக ஊழியர்கள் ேநற்று முதல் உள்ளிருப்பு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ரூ.6 லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. புதுவை சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் (பிடிடிசி) பணிபுரியும் வெயிட்டர், உதவி மேலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு கடந்த ஆட்சியில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் மூலம் அவர்களுக்கு சம்பளமும் கூடுதலானது. இந்நிலையில் பதவி உயர்வில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த பதவி உயர்வை பிடிடிசி நிர்வாகம் இப்போது ரத்து செய்துள்ளது. இதனால் கூடுதல் சம்பளமும் நிறுத்தப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பிடிடிசி ஊழியர்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம், கடற்கரை சாலை பழைய நீதிமன்றம் ஒட்டியுள்ள பிடிடிசி மேலாண் இயக்குனர் முருகேசனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை. இதனால் பிடிடிசி ஊழியர்கள் நேற்று உள்ளிருப்பு வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். ஊழியர்களின் இப்போராட்டத்தால் ேநாணாங்குப்பம், ஊசுடு படகு குழாம்கள், லேகபே, சீகல்ஸ் உணவகங்கள் செயல்படவில்லை. இதனால் நேற்று ஒரு நாள் மட்டும் ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை பிடிடிசிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்று (13ம் தேதி) மாலை 3 மணிக்கு சுற்றுலாத்துறை செயலர் தலைமையில் பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாகவும், பிரச்னைக்கு தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் எனவும் ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.