கள்ளக்குறிச்சி, பிப். 13: கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் ரோடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மகன் துரை(45). இவரும், கள்ளக்குறிச்சி ஜெஜெ நகர் பகுதியை சேர்ந்த ராஜகோபால் மகன் சந்தோஷ்(35) ஆகிய இருவரும் கார் டிரைவராக உள்ளனர். இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வருகிறது.இந்நிலையில், சம்பவத்தன்று துரை கள்ளக்குறிச்சி கார் ஸ்டாண்டில் இருந்தார். அப்போது அங்கு சந்தோஷ் வந்தார். இதை தொடர்ந்து இருவருக்கும் தகராறு நடந்தது. அப்போது ஆத்திரமடைந்த சந்தோஷ், அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து துரை முகத்தில் குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து துரை கள்ளக்குறிச்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிந்து, சந்தோஷை கைது செய்தார்.