காலாப்பட்டு, பிப். 13: விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே பெரியமுதலியார்சாவடி கிழக்கு கடற்கரை சாலையில் மதுவிலக்கு சோதனைச் சாவடி உள்ளது. இந்த வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்யும் போலீசார், புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்படும் மதுபாட்டில்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்து வருகின்றனர்.இந்நிலையில், சம்பவத்தன்று இரவு ஒரு ஸ்கூட்டரில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தபோது, சீட்டின் கீழ்பகுதியில் 60 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தியபோது, புதுச்சேரி காலாப்பட்டு பகுதியை சேர்ந்த பாண்டுரங்கன் (62) என்பது தெரியவந்தது. தொடர்ந்து மதுபாட்டில் மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு மரக்காணம் கலால் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து பாண்டுரங்கனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.