விருத்தாசலம், பிப். 13: விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் பொதுமக்கள் பயன்படுத்தி வெளியேற்றும் அனைத்து வகையான குப்பை கழிவுகளையும் நகராட்சி லாரிகளில் ஏற்றி விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையிலுள்ள சின்னவடவாடி குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்கின்றனர். இதுபோல் தினந்தோறும் பல டன் குப்பைகளை கொண்டு செல்கின்றனர்.இந்நிலையில் குப்பைகள் மீது தார்பாய் போட்டு மூடாமல் திறந்த நிலையிலேயே ஏற்றி செல்கின்றனர். இதனால் லாரி செல்லும் வழிநெடுகிலும் காற்றில் குப்பைகள் பறந்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. இதனால் கண் பாதிப்பு ஏற்படுவதுடன் விபத்து அபாயம் உள்ளது. மேலும் விருத்தாசலம் பேருந்துநிலையம், அரசு கலைக்கல்லூரி, பள்ளிக்கூடங்கள், ரயில்நிலையம் உள்ளிட்டவைகள் உள்ள பகுதியாக திறந்த நிலையில் குப்பை லாரிகள் செல்வதால், பள்ளி மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். மேலும் வேகத்தடைகளில் செல்லும்போது குப்பைகள் சாலையிலேயே சிதறி கிடக்கிறது. எனவே குப்பை லாரிகளில் தார்பாய் போட்டு மூடி செல்ல நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.